எனக்கு கதை எழுத ஆசை..! ஆனால் கற்பனை எழும்ப வில்லை..! கவிதை வடிக்க ஆசை..! ஆனால் கருத்து வழிய வில்லை..! நான் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை... எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்..? யாருக்கு வேண்டும் எனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும்... எனது கதைகளை, என்னாலையே படிக்க முடியவில்லை... அவ்வளவு வள வள..! எனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம். இதில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் எனது மனைவி... “ஏங்க..! ஏன் இப்படி இருக்கீங்க..? உங்களை யாரு கதை எழுதலேன்னு அடிச்சாங்க..? ஒண்ணு மோட்டு வளையை பாக்கிறீங்க. இல்லே தூங்கி போயிடறீங்க..? உருப்படியாக வேறே ஏதாவது வேலையை பாருங்க”. “வராது..! வராது..! கதை எனக்கெழுத வராது..!” அலுத்துக்கொண்டேன் நான்... நான் தலையில் அடித்துக்கொண்டேன் திருவிளையாடல் தருமி மாதிரி... சீத்தலை சாத்தனார் போல் தலை வீங்கி விட்டது... ‘கடவுளே எனக்கு உதவி செய்ய மாட்டாயா..? கவலையில் அப்படியே நாற்காலியிலேயே தூங்கியும் போய்விட்டேன்.