காதல் என்றால் என்ன…???
என்று என்னையே
கேட்டுக்கொள்கிறேன்…!!!
நம் ஆளுமை திரவமாக
கரைந்து…
புகையாக உருவிழந்து…
இன்னொருவரை முழுமையாகச்
சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன்…
ஆணவம் அழிந்து…
தன்னிலை கரைந்து…
பிறிதொருவருக்காகவே…
ஒவ்வொரு கணமும்
வாழ்ந்துகொண்டிருத்தல் என்பேன்…
நீங்க அதைப் புரிந்துகொள்வீர்களா…???
பெண்களுக்கும் காதல் என்றால்
அப்படித்தானா…?
தெரியவில்லை.…!!!
ஏன்
என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்…???
என்னுடையது ஓரு மனச்சிக்கலா…???
நான்
சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என்
பாதையை அஞ்சி அழுத்தமாகப்
பிடித்துக் கொண்டேனா…???
சமநிலையிழந்த எந்த
சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று
சொல்பவர்கள் உண்டு….
அப்படியானால்…
இதுவும் ஒரு மனச்சிக்கல்.…
ஒரு மனநோய்…
என் நண்பன் என்ன சொல்வான்…???
காமம் என்று
சொல்வான்.…???
அவனைப்போன்ற அறிவுஜீவிகள்
எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள
முயல்பவர்கள்.…
எல்லாவற்றையும் திட்டவட்டமாக
ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே
அறியாதவர்கள்.…
திட்டவட்டமாக ஆக்கிக்
கொள்ளும் போது ஒவ்வொன்றும்
எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க
வைக்கப்படுகின்றன என்பதை அறியாதவர்கள்.…
நீரை கையில் எடுக்க அதை பனிக்கட்டியாக
உறைய வைக்க வேண்டும்….
காமமா…???
இருக்கலாம்…
நீங்களூம் அதையே
சொல்லலாம்.…
ஆனால் …
இல்லை இல்லை இல்லை…
என்றே நான் ஆவேசமாகக் கூவுவேன்.…
காமத்தை நான் அறிந்திருக்கிறேன்.…
காட்டுத்தீபோன்று …
சூழ்ந்தெரியும் காமத்தை….
கடந்த மூன்று வருடங்களாக அதன்
அனல்காற்றின் வெம்மையில் ஒவ்வொரு
கணமும் வாழ்ந்துகொண்டிருப்பவன் நான்.…
காமத்தில் சுயசமர்ப்பணம் இல்லை…
காமத்தில்
தியாகம் இல்லை….
காமத்தில் நாம் ஒரு கணம்
கூட இல்லாமலாவதில்லை…
காமத்தில்
நாம் எதையுமே கொடுப்பதில்லை….
அதில்
நாம் ஒவ்வொரு கணமும் நம்மையே
பார்த்துக்கோண்டிருக்கிறோம்.…
சதுரங்கம்
விளையாடும் ஆட்டக்காரன் இம்மியேனும்
தன்னை மறப்பானா என்ன…???
அவன் முன்
பரப்பப்பட்டிருக்கும் சதுரங்கக்காய்கள்
உண்மையில் பருவடிவம் கொண்ட அவனுடைய
மனம்தான் அல்லவா…???
காமம் ஒரு முடிவிலாத போர்.…
அங்கே
வெலவது ஒன்றே இலக்கு என இரு உடல்கள்
போராடுகின்றன….
உள்ளத்தை ஆயுதமாக
ஆக்கி உடல் நிகழ்த்தும் சமர் அல்லவா அது…???
காமத்தில் முன்வைக்கபப்டும் ஒவ்வொன்றும்
பிறிதொன்றே.…
காமத்தில் சொல்லபப்டும்
ஒவ்வொன்றும் சொல்லப்படாத ஒன்றே.…
பாம்பு எடுக்கும் படத்தை நம் ஏன்
அஞ்சுகிறோம்…???
அது அழகானதுதான்.…
ஆனால்…
அது விஷம் என்பதன் வேறு ஒரு தோற்றம்…
காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே
மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில்
நிற்கக் காண்கிறோம்…
ஆனால்…
நான் கற்ற கல்வியும் நான் வாசித்த
நூல்களும் என்னை கைவிடுகின்றன.…
நான்
சொல்லிச் சொல்லி வந்து என்ன சொல்கிறேன்
என்ற திகைப்பின் முனையில் நின்று
கொண்டிருக்கிறேன்.…
இதை மட்டும்
சொல்கிறேன்.…
காமம் வண்ண ஆடைகளில்,
மின்னும் அணிகளில் தன்னை
வெளிப்படுத்திக் கொள்வது.…
காதல்
அம்மணக்குழந்தை போல களங்கமில்லாத
அப்பட்டம்…!!!
Comments
Post a Comment