சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட இந்த ஆஸ்ரமம் தன்னுள் பல விஷயங்களை பூட்டி வைத்திருக்கிறது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பல விஷயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. ஆஸ்ரமம் இன்றைக்கும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே – அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம் – மகன் நிவாஸ் – மகன்லால் காந்தி – காந்திஜியின் சொந்தம் இவர் – இந்த ஆஸ்ரமம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். இராட்டையில் புதிய விதங்களை உருவாக்கி காதி உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். இவர் இறந்த போது மஹாத்மா காந்தி – நான் விதவையாகி விட்டேன் என்று சொல்லி இருக்கிறாராம் !
ஹ்ருதய குஞ்சம்:ஆஸ்ரமத்தில் காந்திஜி தங்கிய குடில். இங்கே தான் 1918-ஆம் வருடம் முதல் 1930-ஆம் வருடம் வரை தங்கி இருந்தார் காந்திஜி! இங்கே தான் அவர் தேசியத் தலைவர்களையும் வேற்று நாட்டு தலைவர்களையும் சந்த்தித்தார். 1930-ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடையும் வரை இங்கே திரும்புவதில்லை என்ற சபதத்துடன் சென்றாராம்.
குடில் என்று சொன்னாலும், இதில் மொத்தம் ஆறு அறைகள்! காந்திஜியின் அறை, கஸ்தூரிபா காந்தியின் அறை, விருந்தினர் அறை, சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறை மற்றும் அலுவலகம். காந்திஜி பயன்படுத்திய பல பொருட்கள் – சில அசல், சில நகல் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
காந்தி நினைவு அருங்காட்சியகம்: இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு அவர்களால் 1963-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அருங்காட்சியகம். இதற்குள் மூன்று பிரிவுகள் – Gandhi in Ahmedabad Gallery, Painting Gallery மற்றும் My Life is My Message Gallery – கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம்.
நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கலாம். அமைதியான சூழலில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்தில் இன்றைக்கும் பலவித பயிற்சிகள், நடவடிக்கைகள் இருக்கின்றன. ஒரு பெரிய நூலகமும் இங்கே உண்டு. ஒவ்வொன்றாகப் பார்த்து வரலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் இராட்டை கூட சுற்றலாம்! ஒரு பெண்மணி அமர்ந்து இராட்டையைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்கும் சொல்லித் தருவார். இப்படியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை – இங்கே இருக்கும் தபால் பெட்டியில் போடும் தபால் அட்டையில் சர்க்கா அதாவது இராட்டை வடிவம் பொறித்து அனுப்பப்படும் – சாதாரண வட்ட வடிவ Seal போல இல்லாது இராட்டை வடிவ Seal வைத்து அனுப்புவார்கள் என தகவல் தெரிவித்தது. அதற்கான தபால் அட்டைகளும் ஆஸ்ரமத்திற்குள்ளேயே கிடைக்கிறது.
Comments
Post a Comment