பயணம் என்பது ஒரு உயிருக்குள் என்ன நிகழ்த்துகிறது...?
பிரபஞ்ச இயக்கம் ஒவ்வொன்றிலும் ஒரு பயணத்தவிப்பு உள்ளடங்கியிருக்கிறது.
இயற்கை என்பது விளைவுகளால் ஆனது.
விளைவு என்பது ஒருவகையில் செயலின் பயணம் தான்.
ஒரு பயணம் என்ன செய்யும்...?
மண் திறந்த ஒரு சிறுவிதையை வான்நோக்கி எழுகிற பெருவிருட்சமாக வளர்த்துகிறது.
முட்டையைக் கிழித்து நிலம் தவழும் ஒரு ஆமைக்குஞ்சை ஆழ்கடலை அடைய வைத்து ஆயுள் அளிக்கிறது.
காற்றில் சிறகசைக்கும் சிறுபறவையை கண்டங்கள் தாண்டி கொண்டுசெல்கிறது.
மேகத்துள் திரளும் நீர்த்திவலையை பூமி மீது மகிழமகிழ விழ வைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பயணம் நம்முடைய சிறுசிறு நம்பிக்கைகளை உடைக்கிறது.
அதன்மூலம் நம்மை நிலைகுலைக்கிறது.
ஆனால் கொஞ்ச காலத்திற்குப்பின், உடைந்தழித்த நம்பிக்கைகள் நமக்குள் பெரும் நம்பிக்கைகளாக உருப்பெருகிறது.
வாழ்வின் மீது அளவிலாத விருப்பத்தை வழங்குகிறது.
இதற்கு முன் நம்பியதைவிட இன்னும் வலுவாக நம் மனதை நம்பச்செய்வதே ஒரு பயணம் நமக்குள் நிகழ்த்தும் அருஞ்செயல்.
இந்த பயணம், கைகளில் புகைப்படக்கருவியை ஏந்திப் பயணித்த ஒருவனின் மறக்கவியலாத பயணநினைவுகள் மற்றும் அதன் காட்சிப்பதிவுகளின் தொகுப்பு.
இலக்கற்ற ஒரு பயணத்துக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்த ஒருவனின் ஒளிதேடும் தவிப்பு.
உலகம் ஒரு புத்தகம்… தினமும் நீங்கள் பயணிக்கவில்லை என்றால், புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
துவாரகைக்கு கிருஷ்ணர் வந்தது எப்படி:
மதுராவில் கம்சன் கிருஷ்ணரால் கொல்லப்படுகிறான்.
இதனால், கிருஷ்ணர்-பலராமன் சகோதரர்கள் பலவான்கள் என்று தெரிந்து விடுகிறது.
சாந்தீபனியின் மகனை சங்குவில் / சங்குதேசத்தில் மறைந்திருந்த பஞ்சஜா என்ற அரக்கனைக் கொன்று மீட்டு, அவனிடமிருந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கைத் தமதாக்கிக் கொண்டார்.
அதன் சப்தம் எதிரிகளுக்கு எச்சரிக்கையாகியது.
ஒருவேளை எதிரிகள் வருவதை உணர்த்தவும் சங்குகளை ஊத ஆரம்பித்தார்களா என்று தெரியவில்லை.
தனது மருமகனான கம்சன் கொல்லப்பட்டது அறிந்து, அவனது மாமனார் மகதத்தின் அரசன் ஜராசந்தன், கிருஷ்ணரைப் பழிவாங்க நினைத்தான்.
ஒரு பெரும்படையோடு வந்து, யாதவர்களைப் பூண்டோட அழிக்க நினைத்தான்.
கிருஷ்ணன் ஜராசந்தனை கொன்று பிறகு கிருஷ்ணர், யாதவர்களை மூட்டை-முடிச்சுகளோடு, மதுராவிலிருந்து துவாரகைக்குச் சென்று விட்டார்.
இவ்வாறு, கிருஷ்ணர் செய்ததால், யாதவர்கள் வளமான வாழ்க்கையும் மற்றும் பாதுகாக்கப்பட்டனர்.
துவாரகைக்கு வந்ததும், எட்டு பெண்களை மணந்து கொண்டு, எட்டுதிசைகளையும் காக்கும் வண்ணம், தனது கோட்டையை பலப்படுத்திக் கொண்டு, துவாரகைத் தீவில் வாழ்ந்து வந்தார். இதனால், துவாரகை “பூலோக சுவர்க்கம்” என்றே அழைக்கப்பட்டது...
கிருஷ்ணாவின் துவாரகை கண்டுபிடிக்கப்பட்ட விதம்:
துவாகதீஸ் கோவிலுக்கு மிக அருகில் ஒரு குழி தோண்டியதில் கிடைத்த அகழ்வாய்வு ஆதாரங்கள் சுமார் 1500 BCE காலத்திற்கு தேதியிடப்பட்டன.
அதாவது மக்கள் வசித்து வந்த ஆதாரங்கள், கோவிலின் தொன்மையினை எடுத்துக் காட்டியது.
1983லிருந்து 1987 வரை எஸ். ஆர். ராவ் மேற்கொண்ட கடலடி அகழ்வாய்வு ஆராய்ச்சிகள் மகாபாரத காலத்தைய துவாரகை கண்டுபிடித்தது உறுதியானது.
கோமதியின் கரையில், சமுத்திர நாராயணன் கோவிலுக்கு எதிரில் மூழ்கிய ஒரு துறைமுகத்தின் பகுதிகளை 1988 முதல் 1990 வரை ஆராயப்பட்டது.
கடலடியில் இருந்த கட்டிட கற்தூண்கள் முதலியவை ஒரு நகரத்தின் அமைப்பினைக் காட்டின. அங்கு கிடைத்த உடைந்த சிற்பங்கள், இரும்பு மற்றும் கருங்கல் நங்கூரங்கள், முத்திரைகள் முதலியவை மூழ்கிய துவாரகை நகரத்தை மெய்ப்பித்தது.
மட்பாண்டங்கள், அவற்றின் உடைந்த பகுதிகள் முதலியன துவாரகையில் அதிகம் கிடைத்துள்ளன. அவற்றின் தேதியைக் கணித்தபோது சுமார் 1600-1500 BCE என்ற தேதி நிரூபணம் ஆகியது.
இதேபோல நாகேஸ்வர், பிரபாஸ, ரங்கப்பூர் போன்ற நகரங்களில் கிடைத்தவற்றின் மட்பாண்டங்களும் அதே காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.
அதாவது, இப்பகுதிகளில் மக்கள் வசித்து வந்தனர், அக்காலமும், கோவிலின் காலமும் அகழ்வாய்வு ரீதியில் ஒத்துப் போகிறது.
மகாபாரத்தின் குசஸ்தலி தான் துவாரகா என்றதும் பொறுந்தி வருகிறது. மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற இலக்கியங்களில் கொடுத்துள்ள விவரங்கள் அகழ்வாய்வு ஆதாரங்களுடன் ஒத்துப் போவதை எடுத்துக் காட்டி, அந்த மூழ்கிய நகரம் துவாராகா தான், அது மஹாபாரத காலத்தைச் சேர்ந்த கிருஷ்ணைன் துவாரகா தான் என்று இவ்வாறு உறுதியானது.
சுதாமா சேது:
துவாரகாவில் கோமதி ஆற்றின் மீது 166 மீட்டர் நீளமுள்ள 'சுதாமா சேது' என்ற கேபிள் தங்கியிருக்கும் பாதசாரி பாலம் .
இது துவாரகாதீஷின் ஜகத் மந்திர் மற்றும் பஞ்சநாத் தீர்த்தத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உதவுகிறது.
கோவில் தரிசனத்தை முடித்த பிறகு இந்த பாலத்தை கடக்க பத்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
துவாரகை கடற்கரை:
சுதமாசேது பாலத்தை கடந்த நாம் துவாரகை கடற்கரையை அடையலாம்.
இந்த கடற்கரை பாலைவனம் போல் பறந்து விரிந்து காட்சி அளிக்கும்.
இங்கு இருந்து நாம் துவாரகை பார்க்கும் போது மாகாபாரதம் அல்லது பாகுபலி படத்தில் வரும் நகரம் போல் காட்சி அளிக்கும். பால்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து துவாரகை நாகரிகம் நாம் கண் முன்னே தோன்றும்.
இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு பாய்ந்து சென்று கொண்டு இருக்கும் கோமதி நதி கண்ணாடி போல் தூய்மையாக இருக்கும்.
இந்த கடற்கரை சுற்றி பார்க்க ஒட்டக சவாரி செய்யலாம். நாங்கள் நடந்தே இந்த கடற்கரையை சுற்றி வந்தோம். சிறுவர்கள் மிக ஆர்வமாக ஒட்டக சவாரி செய்தார்கள்.
இந்த கடற்கரைக்கு மேற்கு பாகிஸ்தான் உள்ளது. இங்கு குஜராத் மீனவர்கள் மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சண்டை யிட்டுகொள்வார்கள்.
இந்த கடற்கரையில் நீர் சுத்தமாக இருக்கும். இங்கு குளிக்கலாம் சினிமா சூட்டிங் நடக்கும் மேலும் இங்கு குயுபா டைவிங் மூலம் ஆக்ஸிஜன் பொருத்துகொண்டு கடலுக்கு அடியில் உள்ள பழைய நாகரங்களின் கட்டிடங்களை காணலாம்.
நாகேஸ்வரர் கோவில்:
துவாதஸ ஜோதிர்லிங்களில் ஒன்று மற்றும் முதலாவதாகத் தோன்றியது இது என்று, சொல்லப்படுகிறது.
படைப்பிற்குப் பிறகு, பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்த போது, சிவன் ஆரம்பம்-முடிவு இல்லாத ஒளிப்பிழம்பாக மாறினார். அவ்வொளி 64 மற்றும் 12 என்று மாறியதாகவும், அவ்வாறே அவை லிங்கங்களாக மாறின என்றும் புராணம் கூறுகிறது. 108 லிங்களில் ஒன்று என்ரும் கூறப்படுகிறது.
இக்கோவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.
மனிதனின் உடல் படுத்திருப்பது போலிருந்தால், எப்படி கால் பகுதியிலிருந்து, தலைப்பகுதி வரை மனிதனின் நிலை உயர்கிறதோ, அதே போல மனிதன் கால்களினால் நடந்து வந்து, படிப்படியாக கோவிலின் உள்ளே சென்று, கர்ப்பகிருகத்தில் பிரதான விக்கிரகத்தை வணங்கும் பொழுது, தலை வணங்கும், மனம் இறைவனை நினைக்கும் என்பதனைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
லிங்கம் மேற்கு பார்த்திருக்கிறது, பக்தர்கள் வணங்கும் போது, சூரியனைப் பார்த்து வணங்குவர். மேற்கு பார்த்து இருந்ததற்கு ஏக்நாத் என்ற பக்திகவியின் தொடர்பையும் வைத்து காரணம் கூறப்படுகிறது.
கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது என்பதிலிருந்து, இது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெரிகிறது. அகழ்வாய்வு மேற்கொண்ட போது, ஹரப்பன் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன.
கோபி தாலாவ் / கோபி தாலாப்:
இது கோபிகைகளின் குளம் எனப்படும், இது துவாரகாவிலிருந்து 21 கி.மீ மற்றும் நாகேஸ்வரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. வட்டவடிவில் உள்ள ஒரு அழகான குளம் ஆகும்.
சூரத்தைச் சேர்ந்த மேலெக் கோபி / மாலிக் கோபி என்ற செல்வந்த வணிகன் 1510ல் / 16ம் நூற்றாண்டில் கட்டினான்.
புராணத்தின் படி, கிருஷ்ணர் பௌமாசுரனைக் கொன்று அவனிடத்தில் சிறையிருந்த 16,000 கோபிகைகளை விடுவித்தார் என்றுள்ளது.
இன்னொரு குறிப்பின் படி, சிறு வயதில் கிருஷ்ணர் இங்கு கோபிகைகளுடன் பௌர்ணமி இரவில் “ராஸ லீலை” புரிய வருவார் என்றுள்ளது.
அரக்கனின் அரண்மனையில் அடைப்பட்டிருந்த இளவரசிகளை விடுவித்தார் என்று இன்னொரு குறிப்பு கூறுகின்றது.
ஆனால், அவர்களை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்ளாததால், அங்கேயே பாறைகளாக மாறிவிட்டனராம். அதாவது 16,000 கோபிகைகளின் உடல்கள் பாறைகளாக மாறிவிட்டன.
அதனால், அப்பாறைகள் மஞ்சள் நிறத்துடன் வாசனையுடனும், நீரில் கரையும் தன்மையுடனும் இருக்கின்றன. அதனால் தான், அவை “கோபி சந்தனம்” என்றேயழைக்கப் படுகிறது. இதனை, வைஷ்ணவர்கள் நெற்றியிலும் மற்ற குறிப்பிட்ட பாகங்களிலும் சின்னமாக தரிக்கின்றனர்.
பேட்-துவாரகா:
சங்குகள் இங்கு அதிகமாகக் கிடைப்பதால் “சங்கோதார்” (சங்கதுவாரம் = சங்குகள் கிடைக்கும் இடத்திற்கு செல்லும் வழி, சங்குகள் கிடைக்கும் இடம்) என்றே இவ்விடம் அழைக்கப்படுகிறது.
பேட் துவாரகை, கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை தரைவழி பயணம் செய்து (பேருந்து, கார் மூலம்) சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகைக்கு செல்லவேண்டும்.
இங்கு சங்கு சக்கரங்களுடன் காட்சியளுக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.
முன்பு இங்கு கிருஷ்ணரின் மாளிகை இருந்ததாகவும், அதில் சத்தியபாமா மற்றும் ஜாம்பவதி வசித்தனர் என்றும் கூறப்படுகிறது.
இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் செய்து பூஜை செய்யப்படுகிறது.
ருக்மணி கோவில்:
இரண்டு அடுக்குகள் கொண்ட இக்கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கின்ற இக்கோவில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கடற்கரையில் தனியாக உள்ளது. கருவரை, வட்டவடிவில் நடு மண்டபம், அர்த்த மண்டபம் என்றுள்ளது.
வெளிச்சுற்றில் சிற்பங்கள் மூன்றடுக்குகளில் உள்ளன.
கீழடுக்கில் சுற்றிலும் ஆபாசமான சிற்பங்கள் காணப்படுகின்றன.
நடுவில் மூன்று திசைகளில் மூன்று தெய்வ சிற்பங்கள் உள்ளன. அதன் கீழ் யானைகளின் சிற்பங்கள் உள்ளன.
ஆனால், அவையெல்லாம் உருதெரியாமல் அழிந்துள்ளன. கடற்கரையில் உள்ளதால், உப்பின் தன்மையினாலும், காற்றினாலும், அரித்தெடுக்கப்பட்டு உருமாறி
இருக்கின்றன என்கிறார்கள்.
நடுவில் இருக்கும் சிற்பங்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால், கால்-கைகள் உடைக்கப்பட்டுள்ளன.
அதனால், ஒருவேளை இக்கோவில் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. பின்பக்கத்தில், கோவில் சுவரை ஒட்டி யாரோ ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.
நண்பர்கள் மற்றும் இந்த கட்டுரை வாசிக்கும் அனைவருக்கும்...
பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள்.
நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.
நினைத்தாலே இனிப்பவை பயணங்கள்.
பல நோய்களுக்கு மனமே ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.
எனவே, மனதை மகிழ்ச்சியுடன் வைக்கச் செய்து, நோய்களைத் தடுக்க உதவும் பயணங்கள் காலத்தின் கட்டாயம்.
*****பயணங்கள் என்றும் முடிவதில்லை...
ஜன்னலோர இருக்கையும் நமக்காகக் காத்துக்கிடக்கின்றன...
தொடர்ந்து பயணிப்போம்.
Comments
Post a Comment