ஏன் நிலைக்கண்ணாடியை நாம் காணமுடிவது இல்லை..?
ஏனெனில் அது முழுமையாக பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதனாலேயே.
ஆனாலும் பிரதிபலிக்கும் பிம்பங்கள்தான் கண்ணாடி என்று சொல்லிவிடமுடியாது.
பிரதிபலிக்கும் செயலைச் செய்தபடி ஒரு கண்ணாடி காணப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது...
என் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறேன்...
நான் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது...
என் மனம் என்று சொல்வது எதை...?
மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்..!
ஆனால் மனம் என்பது அதுதானா..?
எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது..?
எது அவற்றை ஒளிபரப்புகிறது..?
எதன் மீது அவை ஓடுகின்றன..?
அதை பார்ப்பது எந்த விழி..?
மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும்..!
அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதைப்பொறுத்தது மட்டுமே..!
என் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நான் கவனிக்கிறேன் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்..!
ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக என்னால் அதை அறிய முடியாது..!
அப்படி அறிய முயன்றால் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும்..!
Comments
Post a Comment