கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...
கோபுர தரிசனம் பாப விமோசனம்...
ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.
ஸ்ரீரங்கம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.
சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.
ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை.
அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.
ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.
விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.
பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான்.
அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார்.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.
இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது.
வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம்.
இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.
மூல மூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார்.
கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறை மேல் தங்க விமானம் ஜொலிக்கிறது.
தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாசுதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வணங்களினால், வறுமை அகன்று செல்வத்திற்கு அதிபதியான சுக்ரனே நேரில் வந்து நமக்கு அருள் கொடுப்பதாக ஐதீகம். இதனால் தான் இந்த ஸ்தலத்தை சுக்ர ஸ்தலம் என பெயர் பெற்றது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.
Comments
Post a Comment