கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் பூன்டி செல்லும் வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி பயணமானோம்.
கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
ஈஷா தியான மையம்:
ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும் உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு.
தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது.
மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும்.
இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரிசிக்க முடியும்.
இந்த தீர்தக்குண்ட அமைப்பின் தரிசனம் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தியது மட்டுமல்லாது ஒரு ஆன்மீக அனுபவத்தை அளித்தது.
இந்த தீர்த்தக்குண்டமானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது.
தீர்த்தக்குண்டத்தில் தரிசனம் முடிந்தபின் தியான மையத்தினுள் செல்லும் முன்பாக லிங்க பைரவி ஆலய தரிசனம். லிங்க பைரவி ஆலயத்தின் முன்னே முப்பெரும் தேவர்களின் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன தத்ரூபமாக.
இவையனைத்தையும் தரிசித்துவிட்டு ஈஷா தியான லிங்க மண்டபத்தினிற்குள் அனுமதிக்கப்படுகின்றோம். அரை வட்ட வடிவில் ஒரு DOM அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட தியான லிங்கத்தை சுற்றி பலரும் தியானம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். எந்தவிதமான சப்தம் எழுப்பும் பொருட்களுக்கும் தியான லிங்க மையத்திற்குள் அனுமதி இல்லை. பேன்ட் அணிந்து சென்றால் கூட இரண்டு அங்குலத்திற்கு மடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஒலி எழுப்பப்படுகின்றது. அதனை வைத்து தியானத்தில் இருந்து வெளிவரலாம். மொத்தத்தில் ஈஷா தியான மைய தரிசனம் ஒரு Rejuvenating experience (அனுபவத்தை புதுப்பித்தல்).
ஆதியோகி சிலை:
இச்சிலை 112 அடி (34 மீ) உயரம் கொண்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது 500 டன்கள் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்) கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது. இச்சிலை யோகா மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது. ஆதியோகி என்று பெயரிடப்பட்டது.
Comments
Post a Comment