வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக, வெல்வதற்காக நிகழ்வது என்ற எண்ணத்திலிருந்துதான் பலவிதமான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையின் இளமைப்பருவத்தில் நாம் நம் வாழ்க்கை ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கான கருவி என்ற எண்ணத்திற்கு ஆட்படுகிறோம் அதீத உற்சாகத்துடன் பலவற்றில் ஈடுபடுகிறோம்.
ஒருவர் உலகியல்சார்ந்த எந்த விஷயத்திலும் ஒற்றைப்படையான தீவிரத்துடன் ஈடுபட்டாரென்றால் அவர் ஒரு வெறுமையைச் சந்திப்பது உறுதி. அதில் அவர் வென்றாலும் தோற்றாலும். வாழ்க்கை என்பது அதன் பல்வேறு கூறுகள் நடுவே உள்ள சமநிலையாலானது.
வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன.
அந்தப் புரிதலை அடையும்போது வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் செலவிட்டவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வாழ்க்கை வீணாகிவிட்டதாக உணர்கிறார்கள். முடிந்துவிட்டதென்ற எண்ணத்தை அடைகிறார்கள்.
என் வாழ்க்கையிலும் நான் என் உடல் மற்றும் மனம் சார்ந்த பல ஏமாற்றங்கள், தேவதனைகள் மற்றும் துன்பங்கள் அடைந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்று பலமுறை நான் நினைத்து கொண்டு இருப்பேன். நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் தற்கொலைசெய்யும் நோக்குடன் அதிகாலை வீட்டைவிட்டுக்கிளம்பிப் பக்கத்தில் உள்ள நுங்கபாக்கம் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து கோடம்பாக்கம் அடைந்தேன் ஆனால் சாவதற்கு படிக்கவில்லை.
ஆழ்மனம் தற்கொலைசெய்ய விரும்பவில்லை என இன்று ஊகிக்கிறேன். அது வாழ்வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கவேண்டும். ஆகவே ஒரு திறப்பு நிகழ்ந்தது. நான் இலைநுனியில் உடலே ஒளியாக அசைந்த ஒரு புழுவைக் கண்டேன். அது ஒரு தரிசனம்.
அன்று அறிந்தது என்ன என்று புறவயமாகச் சொல்லமுடியாது. ஆனால் வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன் என
அதன் பின் இத்தனை வருடங்களில் எனக்குத் துயரம் என எதையும் நிகழ நான் அனுமதித்ததில்லை. சற்றே மனச்சோர்வு வந்தாலும்கூட ‘நேரமில்லை…இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவிலலை என்றே சொல்லிக்கொள்வேன். வீணடிக்க நேரமில்லை என்ற பிரக்ஞையே என்னை உருவாக்கியது என்று நினைக்கிறேன்
நான் என் கனவுகளில் மகத்தான வாழ்க்கையை வாழமுடியுமென அறிந்தேன். எழுதுவதும் வாசிப்பதும் அந்தக் கனவை நிகழ்த்திக்கொள்வதற்கே. பயணம்செய்வதும் உரையாடுவதும் அக்கனவில் வாழ்வதற்கே. வாழ்நாளின் ஒவ்வொரு துளியையும் வீணாக்காமல் எனக்கு இனிய விஷயங்களால் நிறைத்துக்கொள்ள முயன்றேன்
அப்போது தெரிந்தது இந்த வாழ்க்கை போதாது என. நான் வாசிக்காத நூல்கள்,எழுதவேண்டிய நாவல்கள்,செல்லவேண்டிய ஊர்கள் விரிந்துபரந்துகிடக்கின்றன. இருபத்தைந்து வருடங்கள் இமைப்பொழுதாக ஓடிவிட்ட்ன. இன்னும் அதேயளவு நேரம் கிடைத்தால் நான் ஆசிபெற்றவன்
ஒருவேளை அந்த சிருஷ்டிசக்தி என்னிடம் கேட்டால் ‘நீ இன்னும்கூட எனக்கு அள்ளிக்கொடுக்கலாம். ஏனென்றால் நீ கொடுத்த எதையும் நான் வீணடிக்கவில்லை’ என்று என்னால் சொல்லமுடியும்.
*****வாழ்க்கை வாழ்வதற்கே
Comments
Post a Comment