உயிர்பலி இறைவனால் விரும்பப்படுகின்றதா...?!
சிலர் தன்னுடைய விருப்பம் நிறைவேற அல்லது தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் பெயரை சொல்லி அவருக்கு விலங்குகளை பலியிடுகின்றார்கள் ஆனால் இறைவன் அதை ஏற்கின்றாரா இறைவனுக்கு விருப்பமானது ஒரு விலங்கின் உடலா?
உயிரைப் போக்க பட்ட மாமிசம் இறைவனுக்கு பிரசாதம் ஆக முடியுமா. இறைவன் தனது குழந்தையை தனக்கே பலியிட சொல்வாரா?
ஏனென்றால் படைப்பவர் ஒருவரென்றால் உலகப் படைப்புகள் அனைத்தும் அவரது குழந்தை தானே.
இறைவன் விரும்பும் பலி எது?
அதை மனிதன் இறைவனுக்கு கொடுக்கின்றானா?
குடும்பத்தில் இருக்கும் தந்தை எப்படி மகன் சத்திய வழியில் செல்ல வேண்டும் தர்மத்தின் படி நடக்கவேண்டும் என்று விரும்புகின்றாரோ, அதைத்தான் இறைவனும் விரும்புகின்றார்.
நல்வழியில் நடக்கும் ஒரு மகனின் மூலம் நற்பெயர் கிடைக்கின்றது. அதுபோலவே தந்தை ஈசனும் ஆத்மாவை எந்த ஒரு தீய குணமும் அற்றதாக மாற்றவே விரும்புகின்றார்.
கடவுளின் நாமத்தை ஆயிரம் தடவை சொன்னாலும் உள் ஒன்றும் புறமொன்றுமாக இருந்தால் அதனால் என்ன பயன்?
ஒழுக்கமான நெறியில் செல்பவரே எந்த ஒரு சூழ்நிலையிலும் அசையாதவரே மேலிருந்து பார்க்கும் கடவுளுக்கு விருப்பமானவர். இப்படிபட்டவர் எதுவாக இருந்தாலும் கடவுளுக்கு முன்னால் உட்கார்ந்து அந்த செயலை தீர்மானம் செய்கின்றார்.
அதாவது ஒவ்வொரு அடியிலும் அவருடைய வழிப்படி நடக்கின்றார். எனவே எந்த தவறுகளும் ஏற்படாதவாறு தன்னை பாதுகாத்துக் கொள்கின்றார். இப்படிப்பட்டவர் தன்னுடைய எண்ணத்தை கூட வீணானதாகவோ அல்லது உலக தர்மத்திற்கு புறம்பானதாகவோ எண்ணுவதில்லை.
இவரைத்தான் கடவுளுக்காக பலியானவர் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட தூய்மையானவர் தனது உடல், மனம்,செல்வம் யாவற்றையும் இறைவன் தனக்கு வழங்கியதாக எண்ணி அதை தர்ம நெறியில் பயன்படுத்துவார்.இப்படிப்பட்ட ஒருவரையே தனக்கு அர்ப்பணித்தவராக இறைவன் நினைப்பாரே தவிர தனக்கு உயிர்களை பலியிடுவதாலோ அல்லது அவருக்கு அபிஷேகம் ஆராதனையெல்லாம் செய்து விட்டு பிறரை ஏமாற்றுதல், வஞ்சகம் செய்தல், துரோகம் செய்தல் இப்படி தீய குணம் கொண்ட ஒருவர் கொடுக்கும் எந்த ஒரு பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.
உலகில் நேர்மையாக வாழும் ஒருவரை இறைவன் மேலிருந்து பார்க்கின்றார். நேர்மையாக நடப்பேன் என்று சொல்பவரின் வேண்டுதல்கள் ஏற்கப்படுகின்றன.
எனவே நாம் கொடுக்கக்கூடிய பலி எப்படிப்பட்ட பலி என்பதை நம்முடைய உள்ளத்தை நாமே கேட்போம்.
இன்றிலிருந்து மாற்றத்தை நமக்குள் கொண்டு வருவோம். பிறருக்கும் நமக்கும் ஏமாற்றத்தை கொண்டு வரும் எந்த ஒரு தீய செயல்களையும் நாம் செய்வதில்லை என்பதை இறைவனுக்கு முன்பாக உறுதிஎடுப்போம்.
அப்பொழுது நம்முடைய காலம் வசந்த காலமாக மாறும். துன்பம் முடிந்து இன்பம் பெருகும்.நம்முடைய தோஷங்கள் யாவற்றிற்கும் இதுவே உண்மையான பரிகாரமாகும். நல்லது. வாழ்த்துக்கள்.
ஆத்மாவானது மனதின் மூலம் பரமாத்மாவுடன் தொடர்பு கொண்டு பரமானந்தத்தை அனுபவம் செய்யும் இராஜயோகத்தை அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவசமாக கற்று மகிழ்வீர்.
வாழ்த்துக்கள்.
ஓம் சாந்தி.
Comments
Post a Comment