#சிவபெருமானின் #பஞ்சபூததலங்கள்:
நமது இந்து சனாதன தர்மத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும்
இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு.
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.
#பஞ்சபூதம் பெயர்க்காரணம்:
பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகப் பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
#சிவத்தலங்கள்:
1.நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில
2.நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
3.காற்று - காளஹஸ்தி
4.ஆகாயம் - சிதம்பரம் நடராஜர் கோவில்
5.நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
#ஐந்துமுக விளக்கும் தீபாராதனைகளும்:
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்.
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்குக் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
#பஞ்ச பூத தலங்களின் சிறப்புகள்:
1.#காஞ்சிபுரம்
#ஏகாம்பரநாதர்
(நிலம்)
ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் தமிழகத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.
திருக்கச்சியேகம்பம் எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
இங்குப் பல கோயில்கள் உள்ளன.
அவற்றுள் முக்கியமானவை:
1.காமாட்சியம்மன் கோயில்
2.ஏகாம்பரநாதர் கோயில்
3.வரதராஜபெருமாள் கோயில்
4.கைலாசநாதர் கோயில்
இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன.
வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும்.
தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
காஞ்சிபுரத்தைப் பாடியோர்கள் / நெருங்கிய தொடர்புடையவர்கள்: நாயன்மார்கள்:
அப்பர், சுந்தரர் , சம்பந்தர், மாணிக்கவாசகர், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
ஆழ்வார்கள்:
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார்,
அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமனுஜர்
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களிலும் பரிபாடல், மணிமேகலைக் காப்பியத்திலும் உள்ளது.
இப்பகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி.
சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின்படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்குக் கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குத் தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பைப் பெற்றது இந்நகரம்.
இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
2.#திருவானைக்காவல்
#ஜம்புகேஸ்வரர்
(நீர்) திருச்சி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளதுபஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம்.
திருவானைக்காவல் என்ற பெரிய சிவன் கோவில் நகரம் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது, இதனைத் திருஆனைக்கா, திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்றும் அழைப்பர். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது.
திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம் - நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது.
இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளனஇக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர். முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார்.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலம் ஆகும்
திருவானைக்காவல் அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்: உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போலப் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒருவர் யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியிலிருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையுள் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.
இவைகளின் சிவபக்திக்கு மெச்சி, சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறைக் கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
மற்றொரு சன்னிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்றுச் செல்வந்தன் ஆனான்.
காணக்கிடைக்காத பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளன: :மூன்று கால் முனிவர் சிலை.
ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்நிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற தத்துவத்தையும் விளக்குகிறது.
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர். இதை இதுவரை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
3.#திருவண்ணாமலை
#அண்ணாமலையார்
(அருணாச்சலேஸ்வரர்)
(நெருப்பு)
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும்.
ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்.
சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள்.
"இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்தத் தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
”ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” --- பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும்.
சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
ஆஞ்சநேயருக்குச் செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்குச் செந்தூரம் பூசுகிறார்கள்.
மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்குக் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூசை செய்வர்.
அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார்.
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றித் திருப்புகழ் பாட அருளினார். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.
பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாகத் தரிசனம் செய்ய வேண்டியவையாகும்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இங்குப் பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர்.
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.
பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார்.
சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.
அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.
ஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.
ஐந்தாம் பிரகாரம்:கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.
நான்காம் பிரகாரம்:கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
மூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.
இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.
முதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.
4.#ஶ்ரீ_காளஹஸ்தி (திருக்காளத்தி)
#திருக்காளத்தியப்பர்
(காளஹஸ்தீஸ்வரர்)
(வாயு)
சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
திருக்காளத்தி-காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது.
இக்கோவில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
கி.பி. 1516-ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
சீ-சிலந்தி;
காளத்தி என்பது காளம்-பாம்பு;
அத்தி-யானை
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முத்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
இங்கு இலிங்கமாகக் காட்சியளிக்கும் சிவனின் திருமேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.
இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இத்தலம் கண்ணப்பர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
இக் கோயில் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது.
500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் இராசகோபுரம், 2010-ஆம் ஆண்டு, மே மாதம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அதே இடத்தில் புதிய இராஜ கோபுரம் எழுப்பப்பட்டது.
5.#தில்லைவனம் (சிதம்பரம்)
#நடராஜப்பெருமான்
(ஆகாயம்)
சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும் கட்டடக்கலைக்கும் பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இஃது ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயம்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்) மட்டுமல்லாது, வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாளாகப், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார்.
ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடைய இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களைக் காணமுடியும்.
மூலவர் சிலை இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.
சைவப் பெரியோர்களான நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதால் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.
எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.
தேவாரத்தில் சிதம்பரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களில் ஒன்று எனக் கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் பூசித்து வரப்படுகிறது.
இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும் கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
இங்கு, நடராசர் ஆலயமும் தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும் திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
சைவ சமயத்தவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்குமளவுக்குச் சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணமாக வழங்குகின்றனர்.
பக்தி இலக்கியத்திலும் சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றிப் பாடப்பெற்றுள்ளது.
சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்குப் பணி புரிந்துள்ளனர், சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும் கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் ஆலயப்பணிகள் பல புரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
திருச்சிற்றம்பலம் 🙏
Comments
Post a Comment