சிவபூசை – குறியீட்டு விளக்கம்
#அட்டமூர்த்தம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இறை எமக்கு அஷ்டதநு என்று அழைக்கப்படும் அட்ட மூர்த்தம் என்னும் எட்டு இடங்களில் வெளிப்படையாக உள்ளார் என்று சைவம் கூறுகின்றது.
இவ்வாறு இறை வெளிப்பட்டு நிற்கும் எட்டு அட்ட மூர்த்தங்களாவன...
1. பிருதுவி என்னும் நிலம்
2. நீர்.
3. அக்கினி என்னும் நெருப்பு
4. வாயு என்னும் காற்று
5. ஆகாசம் என்னும் வெளி ஆகிய பஞ்சபூதங்களும்
6. சூரியன்
7. சந்திரன் ஆகிய இரு ஒளிமுதல்களும்
8. அனைத்து உயிர்களுமாம்.
1. பிருதுவி என்னும் நிலம்:
சிவபூசையில் பூமியில் இருந்து எடுத்த கல் அல்லது உலோகத்தினால் ஆன இலிங்கம் அல்லது விக்கிரக வணக்கம் பிருதுவி என்னும் பூமியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். பூமியில் விளைந்த உணவுப்பொருட்களை வைத்து நாம் படைக்கும் நைவேத்தியமும் பூமிக்குரிய பூசையில் அடங்கும்.
2. நீர்:
சிவபூசையில் நீரை எடுத்து கங்கா தீர்த்தமாகவும், சிவ தீர்த்தமாகவும் பாவித்துச் செய்யும் அபிஷேகம் நீரில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.
3. அக்கினி என்னும் நெருப்பு:
சிவபூசையில் நாம் காட்டும் தீபமும், நாம் ஹோமம் வளர்த்து பூசை செய்தால் அந்த அக்கினியும் நெருப்பில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.
4. வாயு என்னும் காற்று:
சிவபூசையில் நாம் காட்டும் சுகந்த தூபம் வாயு என்னும் காற்றில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.
5. ஆகாசம் என்னும் வெளி:
சிவபூசையில் நாம் ஒலிக்கும் மணி ஓசை ஆகாசம் என்னும் வெளியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.
6. சூரியன்:
சிவபூசையின் முன்னர் செய்யும் சூரிய பூசை சூரியனில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.
7. சந்திரன்:
சிவபூசையில் நாம் காட்டும் பஞ்சாராத்தியில் உள்ள ஐந்து தீபங்களும் குறிப்பது உலகின் ஒளிமுதல்களாகவுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல் அக்கினி என்பவைகளாகும். இவற்றில் இருந்து இவற்றுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் ஒளிமுதலாக உள்ள இறைக்கு செய்யும் பூசையே பஞ்சாராத்தி.
8. ஆன்மா:
சிவபெருமானுக்கு எட்டாவது மூர்த்தம் எமது ஆன்மா. ஒவ்வொரு ஆன்மாவிலும் அந்த ஆன்மாவின் தலைவனாக உயிர்க்கு உயிராக அதனோடு என்றும் பிரியாமல் இறைவன் உள்ளான். என்றும் பிரியாது இருப்பதால் அவனைப் #பிரான் என்பர்.
“எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் நிரை சேரப்படைத்து
அவற்றின் உயிர்க்குயிராய் நின்றானை”
என்கின்றது சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்.
எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார்.
”எல்லா உயிரும் இறைவன் திருமுன்னிலை என்று சாதகம் செய்”
என்பது சிவயோகர் சுவாமிகளின் நற்சிந்தனை வாக்கு.
சிவபூசையில் குருவுக்கும் குரவர்களுக்கும் உரிய பூசையும், சிவனடியார்களைக்குறிக்கும் சண்டேசுர பூசையும் ஆன்மாவுக்குள் உறையும் இறைவனுக்குச் செய்யும் பூசையாம்.
"குருவில்லா வித்தை பாழ்"
"அடியார் பூசை இன்றி அரன் பூசை பலன் தராது"
என்னும் வார்த்தைகள் இதை விளக்குகின்றது.
உலகனைத்தும் சிவ சொரூபம்:
கடைசியாக சண்டேசுர பூசை முடிந்தவுடன் மணி அடித்து கை தட்டி ஓசை எழுப்புதல் ஐம்பூதங்கள் எங்கிலும், சூரிய சந்திர்களிலும் நீக்கமற நிரவி வெளியாக உள்ள சட ஆகாசத்திலும், ஆன்மாக்களில் உள்ள சிதாகாசத்திலும் வியாபித்து சர்வியாபகமாய் உலகனைத்தும் சிவசொரூபமாய் உள்ள இறைவனுக்கே.
Comments
Post a Comment