காத்தல் & அழித்தல்
காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.
விளக்கக்குறிப்பு:
“நீ நித்திரை கொள்ளும்போது உனது மனைவி, மக்கள், ஆடு, மாடு, தோட்டம், துரவு, கடை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது யார்? ஏன் விழித்தெழுந்தவுடன் எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள்வதாக உன் தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுகின்றாய்?”
- சிவயோகர் சுவாமிகள் வாக்கு
அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்.
விளக்கக்குறிப்பு:
அழித்தல் என்றவுடன் பலருக்குப் பயமாக இருக்கும். ஆனால் அழித்தல் இருந்தால்தான் புத்துயிர்ப்பும் இருக்கும். உண்ட உணவு செரித்துக் கழிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். பிறந்தவர் யாவரும் இறக்காமலேயே இருந்தால் இந்தப் பூமி தாங்குமா? அழித்தல் என்பது முற்றிலும் இல்லாமல் செய்வது அல்ல.
வெளிப்படையாகப் புலனாகின்றவற்றைப் பரு உருவம் என்பர். வெளிப்படையாகப் புலனாகாதவற்றை சூட்சுமம் என்பர். பரு உருவத்தில் உள்ள தனு, கரண, புவன, போகங்களை அவற்றின் மூலப்பொருளான சூட்சுமமான மாயையிலே ஒடுக்குவது அழித்தல் ஆகும். சூட்சுமமான மாயையில் இருந்து தனு, கரண, புவன, போகங்களை மீண்டும் வெளிப்படையாக பருப்பொருட்களாகத் தோற்றுவித்தல் படைத்தல் ஆகும்.
”இல்லது தோன்றாது; உள்ளது அழியாது”
என்பது சைவத்தின் சற்காரிய விதி மட்டுமல்ல, ஐன்ஸ்டீன் சொன்ன இன்றைய விஞ்ஞானத்தின் சட-சக்தி பரிணாம விதியும் (E = mc2 ) ஆகும்.
Comments
Post a Comment