தினம் ஒரு தரிசனம்.. இடது கையில் வீணையைப் பிடித்தபடி சரஸ்வதி🍁.. சகஸ்ரலிங்கம்🙏..!!
அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்...!!
🍁 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🍁 தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🍁 தேனியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உத்தமபாளையம் என்னும் ஊர் உள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🍁 இத்தல மூலவரான காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை இருவருக்கும் இடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார்.
🍁 இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
🍁 சிவன் சன்னதி முன் மண்டபத்தின் மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள் மற்றும் 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.
🍁 இந்த வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் அமைந்துள்ளது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. இதன் அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
🍁 சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். இங்கு லிங்கோத்பவர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
🍁 இக்கோயிலில் பிரம்மாவும், பெருமாளும் இருக்க அவர்களுக்கு எதிரே நந்தியும் இருக்கிறது.
🍁 இத்தலத்தில் காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர், பராசக்தி ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
🍁 இத்தல பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு-சிம்ஹிகையுடனும், கேது-சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.
🍁 நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு நடைபெறும் சர்ப்பதோஷ பரிகார ஹோம பூஜையில் கலந்து கொண்டு ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது.
🍁 இத்தல கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர்.
🍁 இக்கோயிலில் பௌர்ணமியன்று சகஸ்ரலிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
🍁 இத்தலத்தில் கண்ணப்பர் கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள்.
🍁 பொதுவாக மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இத்தலத்தில் இடது கையில் வீணையைப் பிடித்தபடியும், வலது கையில் அட்சர மாலை வைத்தும் அருள்பாகிக்கிறாள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🍁 சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🍁 ராகு, கேது தோஷம் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🍁 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாள், ராகு மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
Comments
Post a Comment