தினம் ஒரு தரிசனம்.. நான்கு சக்கர வடிவங்கள்🙏.. பஞ்ச தீபாராதனை..!!
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!!
🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🙏 தூத்துக்குடியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ராஜபதி என்னும் ஊர் உள்ளது. ராஜபதியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🙏 இத்தல மூலவரான கைலாசநாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் அமைந்துள்ளன. ஈசனின் வாகனமான நந்தி, பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
🙏 கருவறைக்கு இடது புறத்தில் சௌந்திர நாயகி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.
🙏 இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாக விளங்குகிறது. கண்ணப்ப நாயனாருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி அமைந்துள்ளது.
🙏 கண்ணப்ப நாயனார் சிலையின் உயரம் 4.5 அடி ஆகும். இவருக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.
🙏 பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் நவகிரக சன்னதி இருக்கும். அதற்கு மாறாக இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
🙏 காளஹஸ்தி கோயிலுக்கு இணையான தலம் என்பதால் இக்கோயில் "தென் காளஹஸ்தி" என அழைக்கப்படுகிறது.
🙏 இக்கோயிலில் 63 நாயன்மார்கள், காளஹஸ்தி விநாயகர், ஆதி கைலாசநாதர், காளத்தீஸ்வரர் ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.
வேறென்ன சிறப்பு?
🙏 வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் இத்தலத்தில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும், எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.
🙏 பொதுவாக சிவனுக்கு தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால் இக்கோயிலில் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர்.
🙏 ஏனென்றால் சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் உண்டு என்பதால் இங்கு பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர்.
🙏 இக்கோயிலின் தலவிருட்சமாக நெல்லிமரம் உள்ளது. மேலும் இக்கோயிலில் பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது.
🙏 இத்தலத்தில் "நித்ய அக்னி" எனப்படும் விநாயகர், கைலாசநாதர் மற்றும் அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🙏 இத்தலத்தில் மகா சிவராத்திரி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோயிலில் திருவாதிரை, சிவராத்திரி, மாத பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை சோமவாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🙏 நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்து இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
🙏 மரண பயம் நீங்கவும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கவும், குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் நீங்கவும், கேது தோஷத்துக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🙏 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
Comments
Post a Comment